இயற்க்கை வளம் செழித்திருக்கும் பொதிகை மலையின் உச்சியில் பிறந்து அது செல்லும் இடமெல்லாம் வளம் செழிக்க செய்யும் கௌதம ஆற்றின் அரவணைப்பில் உள்ள பல கிராமங்களில் ஒன்றான சிதம்பராபுரத்தில் ஒரு விவசாய குடும்பத்தின் தலைவர் ஆதிமுத்து - தலைவி மல்லிகா தம்பதியருக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் டாக்டர்.சுபாஷ் சந்திர போஸ். தன் ஊரில் உயர்நிலைக்கல்வி வரை பயின்ற அவர் தன் அக்காளின் உணவு விடுதியில் மேலாண்மைக்காக 1989 -ம் ஆண்டு மும்பைக்கு வந்தார். மும்பையின் குட்டி தமிழகமான தாராவில் இயங்கி வந்த அந்த உணவகத்தில் தன் பணிகளை செவ்வனே செய்தார். பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தினை பயனுள்ளதாக செலவிட எண்ணினார். அக்கால கட்டத்தில் மக்களின் மனதில் மலிந்து கிடந்த மூடநம்பிக்கைகளை அகற்றவேண்டும் என எண்ணி அது சார்ந்த துறையான ஜோதிடவியலை தேர்வுசெய்து மேற்படிப்புக்கு ஆயுத்தமானர். பகல் நேரத்தில் உணவு விடுதியில் பணி, இரவு நேரத்தில் படிப்பு என 1998 - 2000 வரை நாட்கள் உருண்டோடின. டோம்பிவிலியில் தனக்கே சொந்தமான உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்தார். இருப்பினும் தன் எண்ணிய எண்ணம் ஈடேறும் வரை ஓய்வதில்லை என தொடர்ந்து படித்து ஜோதிட விஷ்ரத், ஜோதிட ரத்னா , ஜோதிட வசஷ்பதி, ஜோதிட சுந்தர், ஜோதிட மகரிஷி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றார். அருள்நிதி, பிரம்மஞானி போன்ற பட்டங்களை யோகா துறையில் பெற்றார். பொது மக்களிடத்தில் ஜோதிடத்தில் பரவி கிடந்த மூடநம்பிக்கைகளை மருத்துவரீதியாக தீர்வுகள் சொல்வது என தன் திறமைகளை வளர்த்துகொண்டார். இவரிடம் பலரும் வந்து பயனடைந்து சென்றனர். இவரது ஜோதிட திறமையை பாராட்டி ஜோதிடக்கலைக்கான செவாலியர் விருது -2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிப்பது மற்றும் அறியாமையிலிருந்து விடுபட வழி செய்வது சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றை தன் வாழ் நாள் இலட்சியமாக கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது அமைதி இன்றி வாழும் மனிதனால் தன் உலக அமைதி கெடுகிறது. எனவே மனித மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் தான் உலகம் அமைதியாக இருக்கும். பயங்கரவாதம், கலவரம் குறையும் எனவே மக்கள் அனைவரும் தங்கள் மனதினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அமைதியாக வாழலாம். இது யோகா மூலம் மட்டுமே சாத்தியம் எனவேதான் மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கிறேன். மேலும் அனைத்து மக்களும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டால் அவர்கள் மட்டுமின்றி இந்த உலகும் அமைதியாகவும் சந்தோசமாகவும் இருக்கும் என விருது கிடைத்த களிப்பிலிருந்து மீளாமல் நகைக்கிறார்.
No comments:
Post a Comment