mother's Day (அன்னையர் தினம்)

அன்னையர் தினம்
            ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த அன்னையர் தின நன் நாளில் நாம் நம் தாயின், தாய்மையின் பெருமையைய் அறிவது மிகவும் புண்ணியமான விஷயமாகும். உங்களுக்காக "அன்னையர் தினம்" பற்றிய கட்டுரையைய் இங்கு சமர்ப்பிக்கிறேன்.

தாய்:தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.எவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,எவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள்.   தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.

·         தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.

·         தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.

·         தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.

·         தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.

·         தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.

·         தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.

·         தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.

·         தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.

தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:

·         தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).

·         விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.

·         தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.

·         தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.

·         ‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு  இடமில்லாதது தாய்.

·         அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

·         அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.

·         தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.

·         மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.

·         சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.

·         காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.

·         இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து ‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.

·         திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது. ‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.

தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:

·         நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.

·         என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.

தாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:

·         அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் ‘தாய் மார்களே’ என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து ‘தாயே’ என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே ‘மனைவி’ அல்லது ‘காதலி’ என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.

·         பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறாரே தவிர ‘சிறுமியே பிச்சை போடு’ என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.

திருக்குறள் கூறுவது:

          தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற

            சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.

விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.

            "தாயிற் சிறந்ததொரு கோவிலும்இல்லை!!!"

No comments:

Post a Comment